×

முடிவுக்கு வந்தது கோடை விடுமுறை சொந்த ஊர் செல்ல விமானத்தில் கூட்டம் அலை மோதல்: கூட்டத்தை பயன்படுத்தி விமான கட்டணம் ‘கிடு கிடு’

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, விரைவில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவதால் பணி நிமித்தமாக தாங்கள் தற்போது வசிக்கும் ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இதனால், விமானங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதை பயன்டுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திவிட்டன. கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழிப்பதற்காக, சென்னை மற்றும் அண்டை மாநிலங்ளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் தமிழகத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 7ம் தேதி, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன. இதை அடுத்து வெளியூர் சென்றிருந்தவர்கள், குடும்பம் குடும்பமாக மீண்டும் சென்னை மற்றும் அருகில் வேலை செய்யும் ஊரில் உள்ள வீடுகளுக்கு திரும்பிவர தொடங்கியுள்ளனர்.

இதனால், அரசு போக்குவரத்து கழகம் கூடுதலாக ஏராளமான பேருந்துகளை, குறிப்பாக தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்கு இயக்கத் தொடங்கியிருக்கிறது. அதைப்போல் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவுகள் அனைத்தும் முடிந்து வெயிட்டிங் லிஸ்ட் 300 வரை தாண்டிவிட்டது. உடனடி முன்பதிவான தக்கலிலும் ரயில் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.இதையடுத்து பயணிகள், விமானங்களை நோக்கி படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் வெளியூர்களில் இருந்து குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில், பயணிகள் கூட்டம் பெருமளவு அதிகரித்ததோடு, விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

விரிவான கட்டண விவரம்

* மதுரை- சென்னை சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.3,629* ஆனால் தற்போது ஞாயிறு முதல் செவ்வாய் வரை ரூ.8,478 லிருந்து ரூ.12,163 வரை.

* தூத்துக்குடி சென்னை சாதாரண நாட்களில் ரூ.4,401* ஆனால் தற்போது ஞாயிறு முதல் செவ்வாய் வரை, ரூ.8,062 முதல் ரூ.14,116 வரை.

* திருச்சி சென்னை சாதாரண நாட்களில் ரூ.2,718* ஆனால் தற்போது ஞாயிறு முதல் செவ்வாய் வரை, ரூ.6, 865 முதல் ரூ.11,195 வரை.

* திருவனந்தபுரம் சென்னை சாதாரண நாட்களில் ரூ.3,225* தற்போது ஞாயிறு முதல், செவ்வாய் வரை ரூ.5,814 முதல் ரூ.10,225 வரை.

* கொச்சி சென்னை சாதாரண நாட்களில் ரூ.2,889* தற்போது ஞாயிறு முதல் செவ்வாய் வரை, ரூ.4,012 முதல் ரூ.8,357 வரை. இவ்வாறு பல மடங்கு, விமான கட்டணங்கள் திடீரென அதிகரிக்கப்பட்டாலும், பயணிகள் அந்தக் கட்டணங்களையும் செலுத்தி, சொந்த ஊர்களில் இருந்து குறிப்பாக தென், மத்திய மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் பெருமளவு நிரம்பி வழிகிறது.

The post முடிவுக்கு வந்தது கோடை விடுமுறை சொந்த ஊர் செல்ல விமானத்தில் கூட்டம் அலை மோதல்: கூட்டத்தை பயன்படுத்தி விமான கட்டணம் ‘கிடு கிடு’ appeared first on Dinakaran.

Tags : summer holiday ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...